Wednesday, 27 February 2013

ஆண்டப்பரம்பரை அடிமையானது ஏன் ???

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக என்பது சதவிகிதத்திற்கு மேலான திராவிடர்கள் அடிமைகளாக வாழ்ந்தனர். எந்த எதிர்ப்பும், போராட்டமும், புரட்சியும் செய்யாமல், பயிற்றுவிக்கப்பட்ட சர்க்கஸ் விலங்குகளைப்போல வாழ்ந்தனர். இந்த காலகட்டத்தில், மன்னர்களின் குடும்பங்களும், பார்ப்பனர்களின் குடும்பங்களும் மட்டுமே வசதியாக அதிகாரத்தோடு வாழ்ந்தனர். அதிலும் குறிப்பாக பார்ப்பனர்களுக்கு மட்டுமே கல்வி அறிவு கிடைத்தது. பஞ்சம் வந்தால் பட்டினியால் சாவது யாராக இருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை. ஆரியர்களின் வருகைக்குப் பின், ஆரிய பார்ப்பனர்களின் ஆதிக்கம் தொடங்கியபின், திராவிடர்கள் தங்களின் அடையாளங்களை மெல்ல இழக்கத் தொடங்கினர். அவர்களது மொழியில் கலப்படம் செய்யப்பட்டது, அவர்கள் இனத்தில் கலப்படம் செய்யப்பட்டது, அவர்களின் பண்பாட்டில் கலப்படம் செய்யப்பட்டது, அவர்களது செல்வம் பறிபோனது, அவர்களது உரிமை பறிபோனது, ஆட்டுமந்தை கூட்டமாக அடிமைகளாக வாழ்ந்தனர். இதுதான் திராவிடர்களின் வரலாறு. ஆங்கிலேயர் ஆட்சிக்கு வந்தபிறகு, கிடைத்த கல்வியறிவை வைத்து, உலக அறிவை வைத்து, விழிப்புணர்வு பெற்ற சிலர், திராவிடர்கள் மட்டுமே கீழ் நிலையில் இருக்க ஆரியர்களான பார்ப்பனர்கள் எல்லா காலத்திலும் உயர்நிலையில் இருப்பதை உணர்ந்து, அதற்கு எதிராக பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தை ஆரம்பித்து, கல்வி வேலை வாய்ப்பில் திராவிடர்களுக்கும் கொஞ்சூண்டு வாய்ப்பை தாருங்கள் என்று போராடி பெற்றனர். அவர்களால் நீண்டகாலம் பார்ப்பனர்களை எதிர்த்து தாக்குபிடிக்கமுடியவில்லை. தோல்வி அடைந்தனர். காரணம், அவர்கள் பார்ப்பனர்களை எதிர்த்தனரே தவிர பார்ப்பனர்களின் மூல பலத்தை, அவர்களுக்கு சமூகத்தில் இருந்த செல்வாக்கை அழிக்கமுடியவில்லை. அவர்களில் சிலர் பார்ப்பனர்களின் சமூக செல்வாக்கிற்கு ஆதரவாக இருந்துகொண்டு, உத்தியோக செல்வாக்கை மட்டும் குறைக்க முயன்றனர். ஓரளவிற்கு மட்டுமே வெற்றியை அடைய முடிந்த அவர்களை இறுதியில் பார்ப்பனர் வென்றனர். அடுத்த காலகட்டம் ஒன்று தொடங்கியது. தந்தை பெரியாரால் உருவாக்கப்பட்ட, அவரது கொள்கையை கொண்ட சுயமரியாதை இயக்கத்தினரின் காலகட்டம் அது. இந்த சுயமரியாதைகாரர்கள் திராவிடர் கழகத்தை உருவாக்கினர். என்ன செய்தது திராவிடர் கழகம்? என்ன செய்தார்கள் சுயமரியாதைக்காரர்கள்? பார்ப்பனர்களின் மூல பலத்தை, அவர்களின் சமூக செல்வாக்கின் அஸ்திவாரத்தை தகர்க்கும் வேலையை தொடங்கினர். பார்ப்பனர்களின் பலம் என்ன? அவர்களின் அதிகாரம் ஆதிக்கம் எந்த அஸ்திவாரத்தின் மீது கட்டப்பட்டது? கடவுளால் சொல்லப்பட்டதாக சொல்லப்படும் வேதங்கள், வர்ணாசிரமத் தர்மங்கள், அந்த தர்மங்களை கடவுள்கள் நியாயப்படுத்தும் புராண கதைகள், அதை நம்பும் மக்கள், அதற்க்கு காரணமான கடவுள் நம்பிக்கை. இதுதான் அவர்களின் ஆதிக்கத்தின் அஸ்திவாரம். ஹிந்து மதம் என்றால் என்ன? ஆங்கிலேயர் வந்த பிறகு, ஹிந்து என்ற பெயரை சூடிக்கொண்ட அந்த மதம், பார்ப்பனர்களின் வைதீக மதம். அதன் அடிப்படை என்ன? வேதங்களும் வர்ணாசிரம முறையும்தான் அதன் அடிப்படை. அதை நிலை நிறுத்த மனுதர்மம் என்றழைக்கப்பட்ட சட்டம் உதவியது. ஆரிய பார்ப்பனர்களின் வர்ணாசிரம் முறை, நால் வருணம் என்ற அடிப்படையிலான பார்ப்பன, சத்திரிய, வைசிய, சூத்திர என்ற முறையை அடிப்படையாக கொண்டது. அவைகளின் கிளைகளாகவே ஒவ்வொரு வர்ணத்திலும் ஜாதிகள் என்ற முறை உருவானது. இந்த சட்டதிட்டங்களை யார் உருவாக்கினர்? பார்ப்பனர்கள். அந்த சட்டம் என்ன சொல்லுகிறது? பார்ப்பனர்களே உயர்வானவர்கள், சூத்திரர்கள் வேசி மக்கள், இழிநிலையில் வைக்கப்படவேண்டியவர்கள், சூத்திரர்ரகளுக்கு கல்வி தரக்கூடாது, அவர்கள் வேலை செய்வதற்காக மட்டுமே கடவுளால் படைக்கப்பட்டவர்கள் என்று சொல்லுகிறது. யார் இந்த சூத்திரர்கள்? என்பது சதவிகிதத்திற்கு மேல் வாழ்ந்த மக்கள்தான் சூத்திரர்கள். சரி இதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இதை ஏன் யாரும் எதிர்க்கவில்லை? இவைகள் அனைத்தும் கடவுளால் சொல்லப்பட்டவை என்றும், மனிதர்களின் வாழ்க்கை விதியால் நிர்ணயிக்கப்பட்டது என்றும், விதி வலியது என்றும், பிறக்கும்போதே விதி பிரம்மாவால் எழுதப்பட்டுவிட்டது என்றும், விதியை யாராலும் மாற்ற முடியாது என்றும், அதில் ஏதாவது சலுகை வேண்டுமானால் கடவுளிடம் வேண்டிக்கொள்ளலாம் என்றும் தொடர்ந்து சொல்லித்தரப்பட்டது. மக்கள் ஏமாற்றப்பட்டனர். மக்களும் அதை நம்பி வாழத்தொடங்கினர். கடவுளுக்கு தரும் பலிகள், கோவிலுக்குத் தரும் காணிக்கைகள், பார்ப்பனர்களுக்கு செய்யும் தானங்கள், விதியை நம்பி வாழ்வது, தர்மத்தை மீறாமல் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை அதில் உள்ள எல்லா சிரமங்களையும் பொறுத்துக்கொண்டு வாழ்வது, அனைத்திற்கும் கடவுளே காரணம் என்று நம்பி கடவுளை பூஜித்தல் ஆகியவை மூலமாக அடுத்த ஜன்மத்திலாவது இந்த ஜன்மத்தில் கிடைக்காத நல்ல வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாக்கப்பட்டது. ஹிந்து மதம் என்றழைக்கப்பட்ட பார்ப்பன வைதீக மதம் ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மக்கள் அடிக்கடி கொள்ளை நோய், பஞ்சம் பட்டினி, போர் என்று பல காரணங்களினால் இறந்தனர். இந்த சூழலில், மனிதன் இறந்தால் மறுபிறப்பு உண்டு என்ற ஹிந்து மதம் என்று இப்போது அழைக்கப்படும் வைதீக மதத்தின் கோட்பாட்டை மக்கள் மறுக்காமல் முழுமையாக நம்பினர். கடவுள் நம்பிக்கை, விதி, மறுபிறப்பு ஆகிய மூன்றும் அவர்களை போராட தூண்டவில்லை. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, அமைதியோடு, போராடாமல், விதியை நொந்து, கடவுளிடம் முறையிட்டு, தர்மத்தின் படி வாழ்வது என்பதை அறமாக கொண்டு வாழ்ந்தனர். சமூகத்தின் மிக உயரிய நிலை பார்ப்பனர்களுக்கு மட்டும் இயல்பாக வந்து சேர்ந்தது. எந்த சூழலிலும் பார்ப்பனர்களை கொல்லக்கூடாது கொன்றால் பிரமஹத்தி தோஷம் என்ற சூழலும், பார்ப்பனர்களுக்கு உணவு, உடை, பொருள், நிலம் அனைத்தையும் தானம் செய்வதே தர்மம் என்ற சூழலும் அவர்களை எந்த சூழலிலும் எந்த பஞ்சத்தாலும், எந்த போராலும் கொல்லமுடியவில்லை. அவர்களுக்கு மட்டும் சமூகத்தில் இயற்கை மரணம் என்பது இயல்பாக அமைந்தது. கல்வியும், செல்வமும், பாதுகாப்பான நீண்ட வாழ்வும் உடைய அவர்கள் சமூகத்தின் உயரிய செல்வாக்கான மக்கள் சமூகமாக வாழ்வது எளிதாக இருந்தது. இந்த முறையை, இவர்களது ஆரிய பண்பாட்டை சமூகத்தில் நிலைநிறுத்த, ராமாயணம் , மகாபாரதம் ஆகிய புராணக் கதைகள் கடவுள்களின் கதைகள் என்ற அடிப்படையில் மக்களிடம் தொடர்ந்து சொல்லித்தரப்பட்டது. இன்றளவு அது தொடர்ந்து பல வழிகளில் சொல்லித்தரப்படுகிறது. ராமாயணமும், மகாபாரதமும், அதன் கிளை கதையான கீதையும் திராவிட மக்களை அடிமைகளாக வைத்திருக்க பயன்பட்டன என்பது மறுக்கவியலாத உண்மை. இந்த சூழலில், தந்தை பெரியாரின் கொள்கையை கொண்ட சுயமரியாதைக்காரர்கள், திராவிடர்களின் அடிமைத்தனத்திற்கு காரணமான, பார்ப்பனர்களின் செல்வாக்கிற்கு காரணமான, ஹிந்து மதம், அதன் கடவுள்கள், அதன் நம்பிக்கைகள், அதன் வழக்கங்கள், அதன் மூடத்தனங்கள் அனைத்தையும் கேள்வி கேட்டனர், மறுத்து வாதாடினர், எதிர்த்து பிரசாரம் செய்தனர். பார்ப்பனர்களின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கேட்கப்படாத அல்லது கேட்கவே அஞ்சிய கேள்விகளை பெரியாரின் இயக்கத்தவர்கள் கேட்டனர். பெரியாரின் கொள்கைகள் சூறாவளியாக சுழன்றடித்தன. மக்களுக்கு மானமும் அறிவும் ஊட்டுவதை தனது வாழ்நாள் பணியாக செய்தார் தந்தை பெரியார். மக்களில் பலருக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. மெல்ல சமூக மாறுதல் ஏற்பட்டது. ஜாதியில் தாங்கள்தான் உயர்வானவர்கள் என்று பெருமையாக கருதும் பார்ப்பனர்களே, தங்களது ஜாதி பெயரை வால் போல பின்னால் போட்டுக்கொள்ளும் பழக்கத்தை நிறுத்தும் சூழல் உருவானது. இந்தியாவில் வேறு எங்கும் நடக்காத இந்த சமூக புரட்சி, தந்தை பெரியார் என்ற தனி மனிதரின் கொள்கையாலும், அவர் வழி நின்று போராடிய சுயநலமில்லா சுயமரியாதைக்கரர்களாலும் நடந்தது. இன்றும் ஜாதியை உணர்வு அணையாமல் புகைந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றும் வைதீகத்திற்கு அடிமையாக இருக்கும் எண்ணம் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. அவைகள் அணையாமல் இருக்கும் பணியை, பெரியாரின் கொள்கையால் பாதிக்கப்பட்ட பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள் செய்துகொண்டுதான் உள்ளனர். இன்றும் அவற்றை முற்றிலும் அணையாமல் பாதுகாக்க, அவர்கள் பயன்படுத்தும் எரிபொருள் “ஹிந்து மதம்” “கடவுள் நம்பிக்கை” ஆகியவைகளே. என்றாவது ஒருநாள் அவர்களுக்கு சாதகமாக காற்று வீசும் போது, சூழல் உருவாகும்போது, அதை ஊழித் தீயாக மாற்ற கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர். இந்நிலையில்..... இந்து மதத்தை எதிர்க்காதே, பார்ப்பனர்களை மட்டும் எதிர்த்தால் போதும் என்று புதிதாக சிலர் கிளம்பியுள்ளனர். இவர்கள் நுனிமரத்தில் நின்றுகொண்டு அடிமரத்தை வெட்டி சாய்க்கும் வல்லுனர்கள். திராவிட இயக்க வரலாறை மறந்து, அது சொல்லித்தரும் பாடத்தை மறந்து, புது விளக்கம் தருகிறார்கள். அப்போதைய சூழல் வேறு, இப்போதைய சூழல் வேறு, என்று வியாக்கியானம் வேறு. பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும் என்று நினைக்கும் என்று சொல்லுவதைப்போல, இவர்கள் தங்களின் தற்கால சூழலை வைத்து எல்லாம் மாறிவிட்டதாக கருதுகின்றனர். அது உண்மையும் இல்லை. சமூகத்தை புரட்டிப்போட காரணமாக இருந்த கொள்கைகளை ஒழிப்பதன் மூலமாக திராவிட இயக்கத்தை வலுவிழக்க செய்து, அதன் மூலமாக வெற்றிபெறலாம் என்று எதிரிகள் கருதுகின்றனர். கொள்கையற்றவர்களை, பெரியாரின் கொள்கைக்கு எதிரானவர்களை திராவிட இயக்கத்தில் வளர்த்தெடுப்பதன் மூலமாக, திராவிட இயக்கத்தில் பெரியாரின் கொள்கையை இல்லாமல் செய்வதன் மூலமாக, பார்ப்பனியத்தை அதன் செல்வாக்கை மத நம்பிக்கையின் பெயரால் உயர்த்த முடியும் என்று நம்புகின்றனர். அதற்கு இவர்களும் துணை போகின்றனர். பார்ப்பனர்களுக்கு எதிரானது திராவிட இயக்கம் அல்ல, அவர்களுக்கு எதிரானது திராவிட இயக்கத்தில் உள்ள பெரியாரின் கொள்கைகளே. அவர்களுக்குத் தெரிந்த இந்த உண்மை உங்களுக்குத் தெரியாமல் போவதுதான் திராவிட இயக்கத்தை அழிவுக்கு கொண்டுசெல்லும் காரியத்தில் உங்களை ஈடுபடுத்துகிறது. தம்பிகளா.... ஆரியத் தீயை பரவாமல் கட்டுக்குள் வைக்கும் நெருப்பு வளையம் பெரியாரின் கொள்கைகள். அவர்கள் எப்படி வர்ணாசிரமத் தீ கங்குகளை அணைந்துவிடாமல் பாதுகாக்கிறார்களோ, அது போலவே பெரியாரின் கொள்கை என்னும் தீ கங்குகளை அணைந்துவிடாமல் பாதுகாப்பவர்கள் நாங்கள். எங்களுக்குத் தெரியும் எதை எதிர்ப்பது என்று? எங்களுக்கு பாடம் நடத்த முயலாதீர்கள்!நன்றி -திராவிடர் புரட்சி

No comments:

Post a Comment