Thursday, 28 February 2013

காவி தீவிரவாதம்??


காவித் தீவிரவாதம் பொய்யா?

காவித் தீவிரவாதம் என்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் கூறிவிட்டாராம். ஆகா, அமைதியின் சொரூபமான எங்களைப் பார்த்து நாக்கின் மேல் பல்லைப் போட்டுச் சொல்லலாமா? எங்களைவிட அகிம்சாமூர்த்திகள் உலகில் உண்டா என்று சூலத்தைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுள்ளது - சங்பரிவார்கள் கும்பலும் - அதன் அரசியல் வடிவமான பி.ஜே.பி.யும்.

இன்றைய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே மட்டுமல்ல; இதற்குமுன் உள்துறை அமைச்சராகவிருந்த ப. சிதம்பரம் அவர்களும் இதே குற்றச்சாற்றை வைத்ததுண்டு.

நாடாளுமன்றம் நடக்கவிருக்கும் கால கட்டத்தில் அவை சுமுகமாக நடக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி காரணமாக உள்துறை அமைச்சர் ஷிண்டே நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது; நான் கூறியதன் காரணமாக யார் மனமாவது புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்று கூறித் தன் பெருந்தன்மையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதனை வைத்துக் கொண்டு, பார், பார், நாங்கள் உத்தமப் புத்திரர்கள் என்று காவிக் கூட்டம் மார்தட்டுமானால், அதனை விடப் பரிதாபம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் ஒவ்வொரு முறையும் ரகளையில் எதிர்க்கட்சியான பி.ஜே.பி. ஈடுபட்டு வருவதை வாக்காளப் பொது மக்கள் தெரிந்து வைத்துக் கொண்டுதான் உள்ளனர். நாடாளுமன்றத்திற்கு இவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியது, பிரச்சினைகளை எடுத்துக் கூறத்தானே தவிர, நாடாளு மன்றத்தையே செயல்பட விடாமல் முடக்கு வதற்கல்ல.

ஷிண்டேயின் வருத்தம் தெரிவிப்பு மூலம், அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு நாடாளு மன்ற ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் எதிர்க்கட்சியான பி.ஜே.பி.க்கு அதில் நம்பிக்கை இல்லை என்பதையும் வெளிப்படுத்தி விட்டது என்றுதான் கொள்ள வேண்டும்.

காவிப் பயங்கரவாதம் பற்றி உள்துறை அமைச்சர் கூறியதற்குப் போதுமான தக்க ஆதாரங்கள் உண்டு என்று உள்துறை மூத்த செயலாளர் ஆர்.கே.சிங் அய்.ஏ.எஸ். கூறியுள் ளாரே! அவர் என்ன அரசியல்வாதியா? சகல தகவல்களையும் அறிந்து வைத்துக் கொண்டி ருக்கும் இடத்தில் இருக்கக் கூடிய அதிகாரி யாயிற்றே!

எந்த அளவுக்குக் காவிப் பயங்கரவாதம் நிர்வாண கோலத்தில் தாண்டவம் ஆடுகிறது என்பதற்கு மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று போதாதா?

இராணுவத் துறையில்கூட ஊடுருவி இருக் கிறார்களே, இராணுவத்துறையில் மட்டும் கிடைக் கும் ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து இவர்களுக்கு எப்படி கிடைத்தது?

இராணுவக் கல்லூரி வைத்து, சங் பரிவார்க் கும்பலுக்குப் பயிற்சி கொடுப்பதும் இவர்கள்தானே!

மாலேகான் குண்டு வெடிப்பில் உண்மைக்கு மாறாக வழக்கை திசை திருப்பிய நிலையில், அதன் உண்மையைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரி ஹேமந்த்கார்கரே சுட்டுக் கொல்லப் பட்டது எப்படி? அதன் பின்னணியில் இருந்த வர்கள் யார்? என்ற கேள்வியை மத்திய அமைச்சராக இருந்த அப்துல் ரகுமான் அந்துலே நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லையா?

பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் யார்? நாங்கள்தான் பாபர் மசூதியை இடித்தோம் என்று மக்களவையில் அதிகாரப் பூர்வமான எதிர்க் கட்சியின் தலைவர் சுஷ்மா சுவராஜ் பகிரங்கமாகச் சொல்லவில்லையா?

இந்த நிலையில் காவித் தீவிரவாதிகள் என்று சொன்னதும் ரோஷம் பொத்துக் கொண்டு கிளம்பி விட்டதுபோலும்!

ஊருக்கு ஊர் திரிசூலங்களை மக்களுக்கு வழங்கி வன்முறையைத் தூண்டும் வி.எச்.பி. காவிக் கூட்டத்தைச் சேர்ந்தது அல்லவா? உண்மையைச் சொன்னால் எரிச்சலா?

உள்துறை அமைச்சர் ஷிண்டே குறிப்பிட்ட காரணத்துக்காக வருத்தம் தெரிவித்திருக்கலாம். ஆனால் வெகு மக்களுக்குக் காவி தீவிரவாதம்பற்றி மிக நன்றாகவே தெரியும்.

No comments:

Post a Comment